சென்னை:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, பிழை திருத்த பணிகளை மேற்கொள்ளுமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வு துறை இயக்குனர் உஷாராணி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:கடந்த 2020 - -21ம் கல்வி ஆண்டில் படித்த, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிழைகள் இல்லாத தேர்ச்சி சான்றிதழ் வழங்க வேண்டும். இதற்காக, மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களின் பட்டியலை, தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும்.


பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி, பிளஸ் 1 மாணவர்களுக்கான பாட தொகுப்பு, பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர் உள்ளிட்டவற்றை பள்ளி ஆவணங்களின் படி சரியாக உள்ளதா என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


பிழைகள் ஏதாவது இருந்தால், இன்று முதல், வரும் 7ம் தேதிக்குள் திருத்தம் செய்யலாம். எந்த மாணவரின் பெயரும் விடுபட்டு விடக் கூடாது. பள்ளியை விட்டு மாறியிருந்தால், பழைய பள்ளியில் இருந்து பெயரை அகற்றி, புதிய பள்ளியின், 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.