மும்பை:அடுத்த ஆண்டு ஜன., 1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.


தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம் ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கி வாடிக்கையாளர்களின், ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம், இறுதியாக, 2014 ஆகஸ்டில் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 2022 ஜன., 1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல், மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.


அதுபோல வங்கிகள் இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து, 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.