சென்னை : 'நடப்பு ஆண்டில், அரசு வேலைக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது, 59 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால், புதிய வேலைவாய்ப்புகள் குறையும் என, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, அரசு பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகள் ரத்தாக வாய்ப்புள்ளது என, தகவல்கள் பரவின.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அளித்துள்ள விளக்கம்:நடப்பாண்டில், அரசு பணிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, போட்டி தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட, 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி, 'குரூப் - 1 முதல், குரூப் - 4' வரை அனைத்து தேர்வுகளும், உரிய காலத்தில் நடைபெறும். அடுத்த ஆண்டை பொறுத்தவரை, அரசு துறைகளின் தேவைக்கு ஏற்ப, காலியிடங்களை நிரப்ப, தேர்வுகள் நடத்தப்படும்.
எனவே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள், எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி பெறலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments
Post a Comment